×

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜொலிக்க போகும் திருத்தங்கல் செல்லியாரம்மன் ஊரணி

சிவகாசி: திருத்தங்கல் செல்லியாரம்மன் ஊரணியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பயிற்சி மேடையுடன் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டல பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்க வேண்டும் என்று திமுக நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி  நிர்வாகத்தை தெர்டர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து திருத்தங்கல் மண்டலத்தில் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் கிடப்பில் போடப்பட்ட சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. திருத்தங்கல் மண்டலத்தில் வடக்குரத வீதியில் உள்ள செல்லியாரம்மன் ஊரணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ஊரணி கடும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் கழிவுநீர் தேங்கியிருப்பதாலும் ஊரணி சுருங்கி பெரும் துர்நாற்றம் வீசியது. ஊரணி முழுவதும் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை நடைபாதையில் உடைத்து விட்டு செல்கின்றனர்.

மேலும் மின்சார வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. ஊரணிக்குள் மனித கழிவுகள், ஹோட்டல், கறிக்கடை, கோழிக்கடை கழிவுகளை வியாபாரிகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. வடக்கு ரதவீதியில் சாலையோரம் தடுப்பு சுவர் இன்றி இருப்பதால் வாகனங்கள் ஊரணிக்குள் தவறிவிழும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் ஊரணி பயன்பாடு இல்லாமல் போனது. கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கழிவுநீர் ஓடையாக மாறி இருந்தது. இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊரணியை தூர்வாரி பொழுதுபோக்கு பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.61 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து 2வது வார்டு முருகன் கூறுகையில், இந்த ஊரணி தூர்வாரப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும் இந்த பகுதி சுத்தம் ஆகி பொழுது போக்கு பூங்காவாக அழகு பெறும்.  

பூங்கா அமைக்க நிதி ஒதுக்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக பணிகள் தொடங்கப்படாத நிலை உள்ளது. ஊரரணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பணிகளை தொடங்க மாநகராட்சி நிர்வாகம் நடவ்டிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Thiruthangal ,Chelliyaramman Urani , Thiruthangal Chelliyaramman Urani to shine under Artist Urban Development Scheme
× RELATED ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருட்டு